சீனுக்கு வந்த ஸ்மிருதி இரானி.. சூதாட்ட செயலி ஓனர்கிட்ட சத்தீஸ்கர் முதல்வர் பணம் வாங்கியதாக குமுறல்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 7ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் அங்கு பிரச்சாரம் அனல் பறக்கிறது. மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து ரூ.508 கோடி தேர்தல் செலவுகளுக்காக முதலமைச்சர் பூபேஷ் பாகல் பெற்றிருப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.
தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் 7ம் தொடங்கி 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதனையடுத்து மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 5 மாநிலங்களிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் பாஜகவுக்கு முக்கியமானதாகும். ஒருவேளை இதில் பின்னடைவு ஏற்பட்டால் அது நாடாளுமன்ற தேர்தல் வெற்றியையும் பாதிக்கும். அதேபோல காங்கிரசுக்கும் இந்த தேர்தல் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்த அளவில், மொத்தம் 90 பேரவை தொகுதிகள் இருக்கின்றன. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதியும், இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆட்சியில் காங்கிரஸ் இருக்கிறது. எனவே ஆட்சி அதிகாரத்தை இந்த முறை கைப்பற்ற பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் பூபேஷ் பாகல் மீது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
அதாவது, "மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் ரூ.508 கோடி தேர்தல் செலவுகளுக்காக முதலமைச்சர் பூபேஷ் பாகல் பெற்றிருக்கிறார்" என்று கூறியுள்ளார். வடமாநிலங்களில் மகாதேவ் சூதாட்ட செயலி மிகவும் பிரபலமானதாகும். இது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததையடுத்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டில் இறங்கியது. ரெய்டில் ரூ.5.86 கோடி கைப்பற்றப்பட்டதோடு ஆசிம் தாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவரது மொபைல்களை ஆய்வு செய்தபோது, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சுபம் சோனி என்பவர் அனுப்பிய மெயில்கள் மூலம், சுமார் ரூ.508.6 கோடி பணம் முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்மிருதி இரானி இந்த குற்றச்சாட்டுகளை ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.
அதாவது, செய்தியாளர் சந்திப்பில், "காங்கிரஸ் ஹவாலா பணத்தின் உதவியுடன் சத்தீஸ்கர் மாநிலத்தின் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு பூபேஷ் பாகல், ஹவாலா பணம் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முந்தைய தேர்தல் வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்களை மக்கள் பார்த்ததே இல்லை" என்று இரானி குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முழமையாக மறுத்திருக்கிறது.
பூபேஷ் பாகலின் புகழை கெடுக்கும் விதமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், மக்கள் இதற்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ்தான் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications