ஒரே இந்திய அரசியல்வாதி.. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவை ஃபாலோ செய்யும் ஸ்மிரிதி இராணி!
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தை பாஜகவை சேர்ந்த அமைச்சர் ஸ்மிரிதி இராணி பின்பற்றுவது பிரச்சனையாகி இருக்கிறது.
டெல்லி: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தை பாஜகவை சேர்ந்த அமைச்சர் ஸ்மிரிதி இராணி பின்பற்றுவது பிரச்சனையாகி இருக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சூர்ஜ்வாலா குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார்.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது.
பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேனல் 4 நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றச்சாட்டு
ரன்தீப் சிங் சூர்ஜ்வாலா அளித்த பேட்டியில் ''இந்தியாவிலேயே கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பது பாஜக கட்சி மட்டும்தான். இந்த முறை அவர்கள் மோசமாக மாட்டிக் கொண்டார்கள். பாஜக, ஐக்கிய ஜனதா தளம், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா மூன்றும் கூட்டணி அமைத்து இதில் மோசடி செய்து இருக்கிறார்கள்'' என்று குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
கேஸ் போடுங்கள் பார்க்கலாம்
மேலும் ''இதில் எங்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று பொய் சொல்ல பார்க்கிறார்கள். எங்களுக்கு இதில் எந்த கவலையும், பயமும் இல்லை. அவர்களுக்கு பயம் இல்லை என்றால், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் இந்திய கிளையின் நிறுவனர்களை கைது செய்ய முடியுமா?. இதில் பாஜக அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு பெரிய தொடர்பு இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
சாதகம்
மேலும் ''இந்தியாவில் பாஜக கட்சி நிர்வாகிகளும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள். ''மைகவ்'' என்ற இந்திய அரசின் இணையதளத்தை நடத்தும் அரவிந்த் குப்தா கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவிற்கு ஆதரவாக பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் சஞ்சய் ஜோஷி 2011லேயே கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் தலைவரை சந்தித்துள்ளார்.'' என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
பின்தொடரும் ஸ்மிரிதி இராணி
முக்கியமாக ''இந்தியாவில் ஒரே ஒரு அரசியல் தலைவர் மட்டும்தான் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா பக்கத்தை பின்தொடருகிறார். அது வேறு யாரும் இல்லை. பாஜகவை சேர்ந்த அமைச்சர் ஸ்மிரிதி இராணி மட்டுமே. பாஜக கட்சி அந்த அளவிற்கு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்துடன் நெருக்கமாக இருக்கிறது'' என்றுள்ளார்.