பி.டெக். மாணவருக்கு ஐபோனை ரூ.68க்கு அளிக்க ஸ்னாப்டீலுக்கு நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு
சன்டிகர்: பஞ்சாபில் பி.டெக் படித்து வரும் மாணவர் ஒருவருக்கு ஐபோன் 5எஸ்-ஐ ரூ.68க்கு அளிக்குமாறு மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் பி.டெக். படித்து வருபவர் நிகில் பன்சால். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்னாப்டீலில் ஐபோன் 5எஸ் ரூ.68க்கு விற்பனை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை பார்த்த நிகில் ஒரு ஐபோனை ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு ஸ்னாப்டீல் ஐபோனை அளிக்கவில்லை. இதையடுத்து அவர் சங்கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகினார். அவரது வழக்கை விசாரித்த மன்றம் நிகிலுக்கு ரூ. 68க்கு ஐபோன் 5எஸ்ஸை வழங்க வேண்டும், மேலும் அவர் வழக்கு தொடர்ந்ததற்காக செலவு செய்ததால் ரூ.2 ஆயிரம் அளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஸ்னாப்டீலுக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்னாப்டீல் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தை அணுகியது. ஸ்னாப்டீலின் மனு குறித்து விசாரித்த தீர்ப்பாணையம் கடந்த 12ம் தேதி தீர்ப்பு அளித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐபோன் 5எஸ் ரூ.68க்கு விற்பனை என்று தவறாக இணையதளத்தில் அறிவிப்பு வெளியானதாக ஸ்னாப்டீல் தீர்ப்பாயத்தில் தெரிவித்தது.
இந்நிலையில் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
அறிவித்தபடி நிகில் பன்சாலுக்கு ஐபோன் 5எஸ்ஸை ரூ.68க்கு ஸ்னாப்டீல் நிறுவனம் வழங்க வேண்டும். மேலும் நிகிலுக்கு ஐபோனை ரூ.68க்கு அளிக்க மறுத்ததற்காக ஸ்னாப்டீல் நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications