சோலார் பேனல் மோசடி வழக்கு: கேரளா முதல்வர் உம்மன்சாண்டி மீது எப்ஐஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிக் கொண்டிருக்கும் சோலார் பேனல் மோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்யக் கோரி இடதுசாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான சோலார் பேனல்களை அமைத்து தருவதாக கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தனர் கேரளா பெண் தொழிலதிபர் சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் என்பது குற்றச்சாட்டு. இதில் சரிதாநாயர், பிஜு ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ளனர்.
இந்த மோசடியில் கேரளா அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் சரிதாநாயருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த மோசடி குறித்து நீதிபதி சிவராஜன் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
சரிதா நாயர் அதிரடி புகார்
இந்த விசாரணை கமிஷன் முன்பு முதல்வர் உம்மன்சாண்டியும் ஆஜராகி 14 மணி நேரம் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று விசாரணை கமிஷன் முன்பு ஆஜரான சரிதாநாயர், சோலார் பேனல் அமைக்க அனுமதி பெறுவதற்காக முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூ.1.90 கோடி, மின்சாரத்துறை அமைச்சர் ஆரியாடான் முகம்மதுவுக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
திருச்சூர் கோர்ட்டில் வழக்கு
சரிதா நாயரின் இந்த வாக்குமூலம் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திருச்சூர் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் உம்மன்சாண்டி மீதான சரிதா நாயரின் புகார் குறித்து பொதுநலன் வழக்கும் தொடரப்பட்டது.
நீதி அனைவருக்கும் சமம்
இந்த வழக்கை இன்று விசாரித்த லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற நீதிபதி, பிரதமரானாலும் முதல்வரானாலும் அனைவருக்கும் நீதி ஒன்றுதான். முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் அமைச்சர் ஆரியாடான் முகம்மது ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
உம்மன்சாண்டி கருத்து
இத் தீர்ப்பை தொடர்ந்து கேரளாவில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. திருச்சூர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த உம்மன்சாண்டி, நான் எந்த குற்றமும் செய்யவில்லை இதுபற்றி மக்கள்தான் முடிவு செய்வார்கள். என்றார்.
ராஜினாமா கோரிக்கை
இதனிடையே உம்மன்சாண்டி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், 5 ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. இது கேரளாவிற்கே அவமானம். உம்மன்சாண்டிக்கு சரிதாநாயர் லஞ்சம் கொடுத்ததாக கூறி உள்ளதால் முதல்வர் உம்மன்சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கம்யூனிஸ்டு கட்சி தொடர் போராட்டம் நடத்தும் என்றார்.
நெருக்கடி
உம்மன் சாண்டி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கே.எம் மாணி, பாபு ஆகியோர் மீது மது பார் உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து அவர்கள் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் உம்மன்சாண்டி மீதும் புகார் கூறப்பட்டு நீதிமன்றமே வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. கேரளா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடியாக இது உருவெடுத்துள்ளது.