ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் திட்டத்தில் மோடியின் பொய் பிரச்சாரம் அம்பலம்.. கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் திட்டத்தில் மோடி செய்துள்ள பொய் பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி: ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் மனம் உடைந்து போன முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மோடியின் ராஜ்யத்தில் விவசாயிகளும், ராணுவ வீரர்களும் தற்கொலை செய்து கொள்வதுதான் நடந்து வருகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரில்வால் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி டெல்லியில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று டெல்லியில் நடைபெற்ற இது தொடர்பான போராட்டத்தில் அரியானா மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் என்பவரும் தீவிரமாக பங்கேற்றார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனம் உடைந்து போயிருந்த அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியை தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக சாடி இருக்கிறார். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷனின் தற்கொலை மூலம் ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் விவகாரத்தில் பிரதமர் மோடியின் பொய் பிரசாரம் வெளிப்பட்டிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.
மேலும், மோடியின் ராஜ்யத்தில் விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொள்வதுதான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஏன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட ராம் கிஷனின் இறுதி ஊர்வலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.