ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் சிக்கியிருக்கும் மோடி அரசு..... சோனியா 'பொளேர்'
டெல்லி: இந்துத்துவா இயக்கமான ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு சிக்கியிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சாடியுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி அளித்த எந்த ஒரு வாக்குறுதியுமே நிறைவேற்றப்படவில்லை. ஜஹவர்லால் நேருவை இலக்கு வைத்து இந்த நாட்டின் வரலாற்றையே திருத்தி எழுதப்பார்க்கிறார்கள்.
நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. தொடர்ந்து விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது. மேக் இன் இந்தியா போன்ற வெற்று முழக்கங்களை எழுப்புவதால் மட்டுமே பயன் இல்லை.
காங்கிரஸ் கட்சியின் கடுமையான போராட்டத்தால்தான் நில ஆர்ஜித மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. ராகுலின் வழிகாட்டுதலில் நடத்தப்பட்ட போராட்டங்களே இதற்குக் காரணம்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஊடகங்களை அச்சுறுத்துகிறது. ஏதோ ஒரு காரணம் கூறி ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி மிரட்டல் விடுக்கிறது மத்திய அரசு.
எல்லைப் பகுதியில் நாட்டின் பாதுகாப்பு நிலைமை படுமோசமாக உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்களுக்கு சரியான பதிலடி கொடுக்க முடியாத திணறுகிற அரசாக இருக்கிறது மோடி அரசு. மத்தியில் உள்ள மோடி அரசு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் வழிநடத்தப்படுவதையும் அதன் பிடியில் சிக்கியிருப்பதையும் நாடு கடந்த வாரம் பாத்தது. ஆர்.எஸ்.எஸ். கட்டளைப்படிதான் மோடி அரசு செயல்படுகிறது.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications