மத்திய அரசைக் கண்டித்து இன்றும் போராட்டம் தொடரும்.. சோனியா காந்தி அறிவிப்பு
டெல்லி : காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து இன்றும் போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
லலித் மோடி விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா, மற்றும் வியாபம் ஊழலால் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி மக்களவையில் கடந்த திங்கட்கிழமை காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

இதையடுத்து, மக்களவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதாகக் கூறி, மொத்தம் உள்ள 44 காங்கிரஸ் எம்பிக்களில் 25 பேரை 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சி எம்பிக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இரண்டாவது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து மேலும் 6 கட்சியினர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது பேசிய சோனியா காந்தி, நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு காண அரசு எவ்வித முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை. எனவே, எங்களது போராட்டம் நாளையும் (இன்றும்) தொடரும் என்றார்.
சபாநாயகர் பதவிக்கு நாங்கள் மரியாதை அளிக்கிறோம் ஆனால் அவரது முடிவுக்கு நாங்கள் உடன்படவில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications