சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்கும்: சோனியாகாந்தி
டெல்லி: சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்ந்து நீடிக்கும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோனியா காந்தி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் சார்பில், எஸ்.சி., எஸ்.டி. போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்குப் பதிலாக பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை அமல் படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜனார்த்தன் திவிவேதி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலுக்கு யோசனை தெரிவித்திருந்தார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜனார்த்தன் திவிவேதியின் இந்த கருத்தால் சர்ச்சை உண்டானது. மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன்சமாஜ் போன்ற கட்சிகளும் திவிவேதி கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நேற்று ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் இப்பிரச்சினையை முன்னிறுத்தி அமளியில் ஈடுபட்டனர். எனவே, திவிவேதியின் கருத்தால் கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் எனக் கருதிய காங்கிரஸ் கட்சி திவிவேதியின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவும் திவிவேதிக்கு தனது கண்டனத்தை வெளிப்படுத்தும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர், ‘எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கொள்கை நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித ஐயப்பாடோ, மாறுபட்ட கருத்தோ கிடையாது. இந்த இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தி வலுப்படுத்தியதே காங்கிரஸ் கட்சிதான். இந்த முறை தொடர்ந்து நீடிக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications