2016ம் ஆண்டில் ஓய்வு பெற விரும்பும் சோனியா காந்தி: கலக்கத்தில் காங்கிரஸ்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 2016ம் ஆண்டில் தனது 70வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறார் என்று ராஷித் கித்வாய் எழுதியுள்ள 24 அக்பர் ரோடு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான ராஷித் கித்வாய் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதினார். இதையடுத்து அவர் காங்கிரஸ் தலைமையகத்தை மையமாக வைத்து எழுதிய புத்தகம் தான் '24 அக்பர் ரோடு'.
இந்த புத்தகத்தில் பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். அது என்னவென்று பார்ப்போம்.
2016ல் ஓய்வு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 2016ம் ஆண்டில் தனது 70வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறாராம். இது தொடர்பாக சோனியா காங்கிரஸ் தலைவர்களிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தனது பிறந்தநாளன்று பேசியுள்ளார்
ஆடிப்போன தலைவர்கள்
சோனியா காந்தி ஓய்வு பெறும் தனது முடிவை தெரிவித்தபோது அதை கேட்ட காங்கிரஸ் தலைவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனராம். இதையடுத்து தான் ராகுலை பொறுப்பை ஏற்கச் சொல்லுமாறு சோனியாவை வலியுறுத்தினார்களாம்.
கேபினட்டா, கட்சியா?
கேபினட் அமைச்சர் பதவி அல்லது காங்கிரஸ் கட்சியில் நம்பர் 2 இடம் இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுமாறு பிரதமர் மன்மோகன் சிங் ராகுல் காந்தியை வலியுறுத்தி இருக்கிறார். இதையடுத்து தான் ராகுல் கட்சியின் துணை தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
இன்னும் பதட்டம்
என்ன தான் ராகுல் காந்தி கட்சியின் துணை தலைவர் ஆக்கப்பட்டாலும் காங்கிரஸார் சோனியா ஓய்வு பெறுவதை நினைத்து கவலையிலேயே உள்ளார்களாம்.
ராகுல் கறார்
சோனியா போன்று இல்லாமல் ராகுல் காந்தி கறார் ஆனவர் என்றும், அதனால் கட்சியினர் ஒன்று அவருக்கு ஏற்றது போன்று நடக்க வேண்டும் இல்லை என்றால் வெளியேற வேண்டும் என்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உ.பி. முதல்வர்
ராகுல் காந்தி உத்தர பிரதேச முதல்வர் வேட்பாளராக ஆவதில் முனைப்பு காட்டியுள்ளார். ஆனால் கட்சி தான் அவரின் ஐடியாவை ஏற்கவில்லை.
உ.பி. ஈஸி அல்ல
உத்தர பிரதேசம் ஆட்சி செய்ய எளிதான மாநிலம் அல்ல. மேலும் ராகுல் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்குள் முடங்கிவிடக் கூடாது என்பதால் தான் அவர் அங்கு எந்த பொறுப்பையும் ஏற்பது நல்லதல்ல என்று அவரின் உதவியாளர்கள் தெரிவித்தனர்.