"சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளியுங்கள்": மோடிக்கு சோனியா கடிதம்
டெல்லி: சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்த காங்கிரஸ் தலைமையிலான அரசின் செயல்பாட்டால், தெலுங்கானா மக்கள் மகிழ்ச்சியடைந்திருந்தாலும், சீமாந்திரா பகுதி மக்கள் கடும் கோபத்திலுள்ளனர். மாநில பிரிப்பு சட்டத்தை நிறைவேற்றும் முன்பு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் பேசுகையில், சீமாந்திரா மாநிலத்துக்கு ஐந்து ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதனிடையே நாடாளுமன்ற, தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால், சீமாந்திரா மாநிலத்துக்கு 10 ஆண்டுகாலம் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அக்கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். சீமாந்திராவில் காங்கிரஸ் ஒரு சீட்டும் வெற்றி பெற முடியாத நிலையில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை சீமாந்திராவில் வலுத்துவருகிறது. இதுகுறித்து மோடியை நேரில் சந்தித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "சீமாந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், போலாவரம் அணைக்கட்டு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார். சீமாந்திரா பகுதியில் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை மீட்க இதுபோன்ற கோரிக்கைகள் பயன்தரும் என்று அக்கட்சி எதிர்பார்க்கிறது.












Click it and Unblock the Notifications