கேரளாவில் வரும் 30ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குமாம்..! தமிழகத்திற்கு பயன் உண்டா?
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 30ஆம் தேதி தொடங்கும் என கொச்சி வானிலை மையம் அறிவித்துள்ளது.
கொச்சி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 30ஆம் தேதி தொடங்கும் என கொச்சி வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, திருவனந்தபுரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இந்த ஆண்டு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்தது.
இந்நிலையில் கேரளாவில் முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும்.

நாடு முழுவதும் தகிக்கும் வெப்பம்
அதைதொடர்ந்து தமிழகத்திலும் மழை பெய்ய தொடங்கும். தற்போது தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி இருப்பதால் விவசாயிகளும், பொது மக்களும் பெரும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

எப்போது மழை பெய்யும்?
எனவே தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற ஆவல் அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது.

30ஆம் தேதியே பருவமழை
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 30ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கொச்சி வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்றே காற்றுடன் மழை
இதனால் திருவனந்தபுரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது. இன்றே கேரள மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றும் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கடலோர பகுதிகளான விழிஞ்ஞம், கோவளம், சிறையின்கீழ் ஆகிய இடங்களில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது கவனமாக இருக்கும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை பெய்யும்?
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதன் காரணமாக தென் தமிழகத்திலும் இனி படிப்படியாக வெயில் குறைந்து மழை பெய்யும் என தெரிகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications