எனது 4 வயது மகனை கடத்தி விட்டார்... ஆந்திர சபாநாயகர் மகன் மீது மனைவி பரபரப்புப் புகார்
நகரி: தனது 4 வயது மகனை கணவரே கடத்தி வைத்துள்ளதாக ஆந்திர சபாநாயகரின் மகன் மீது அவரது மனைவி போலீசில் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
ஆந்திர மாநில சட்டசபை சபாநாயகரான கோடல்ல சிவப்பிரகாஷ்ராவின் மகன் சிவராம கிருஷ்ணா. இவருக்கு பத்மபிரியா என்ற மனைவியும், கவுதம் என்ற 4 வயது மகனும் உள்ளனர்.
கடந்தாண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவராம கிருஷ்ணாவும், பத்மபிரியாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கவுதம் பத்மபிரியாவின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தனது மகனை மீட்டுத் தரும்படி தனது கணவர் மீது விசாகப்பட்டினம் திரிடவுன் போலீசில் பத்மபிரியா புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கும், சிவராமகிருஷ்ணாவுக்கும் 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனது மாமியார், நாத்தனாரால் எனக்கு தொல்லை அதிகரித்தது.
இதனால், நான் கணவரை பிரிந்து ஒருவருடமாக விஜயவாடாவில் உள்ள தாய் வீட்டில் இருக்கிறேன். எனது குழந்தையும் என்னுடன் உள்ளது.
எனது மாமனார், சிவப்பிரகாஷ்ராவ் சபாநாயகர் ஆனதில் இருந்து எனக்கு, என் கணவர் மூலம் மிரட்டல்கள் அதிகரித்தது.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு எனது கணவர் சில அடியாட்களுடன் வந்து எனது தாயை தாக்கி, குழந்தை கவுதமை கடத்தி சென்றுவிட்டார். அவனை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம் உதவி கமிஷனர் மகேஷ் உத்தரவின் பேரில், இது தொடர்பாக திரிடவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.