ஏர்செல் மேக்சிஸ் வழக்கை சிபிஐ கோர்ட் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி!!
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கை சிபிஐ நீதிமன்றம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றமே ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரிக்கும் என நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்துள்ளார்.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ரூ.742.58 கோடி ஆதாயம்
இதில் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட் மற்றும் சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ரூ.742.58 கோடி கைமாறியுள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

முன்ஜாமீன் மனு
இந்த வழக்கும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

2ஜி கோர்ட் விசாரிக்க எதிர்ப்பு
இதனிடையே இந்த வழக்கை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளுக்கான டெல்லி சிபிஐ தனி நீதிமன்றம் விசாரிக்க கூடாது என்று தயாநிதி உள்ளிட்டோர் தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது வேறு; ஏர்செல்- மேக்சிஸ் என்ற இரு நிறுவனங்களுக்கு இடையேயான பணப் பரிமாற்றம் வேறு என்பது மாறன் சகோதரர்கள் வாதம்

மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி
இம்மனு மீதும் நீதிபதி ஓபி ஷைனி விசாரணை நடத்திவந்தார். இன்றைய விசாரணையின், டெல்லி சிபிஐ நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்ற மாறன் சகோதரர்களின் மனுவை நீதிபதி ஷைனி தள்ளுபடி செய்தார். மேலும் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்கும் என்றும் நீதிபதி ஷைனி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications