நிதி சலுகைகளை கேட்டு விமான அமைச்சகத்திடம் கெஞ்சும் ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம்!
டெல்லி: நிதி பிரச்சினையால் தடுமாறும் கலாநிதி மாறனின், ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்காக சில சலுகைகளை செய்து தரும்படி மத்திய அரசிடம் அந்த நிறுவனம் சீராய்வு திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. இதனிடையே மல்யாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதன் பைலட்டுக்கு அளிக்க வேண்டிய 12.91 லட்சம் சம்பள பாக்கியை கொடுக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பவும் பணமில்லை என்று கூறி ஸ்பைஸ் ஜெட் விமான சேவை கடந்த வாரத்தில் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மத்திய விமான துறை அமைச்சகத்திடம் ஒரு சீராய்வு திட்டத்தை ஸ்பைஸ் ஜெட் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு வாரங்களில் இருந்து அதிகபட்சம் ஒரு மாதம்வரைக்கும் ஸ்பைஸ் ஜெட்டுக்கு அனைத்து எரிபொருள் நிறுவனங்களும் கடனுக்கு எரிபொருளை சப்ளை செய்ய மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று ஸ்பைஸ் ஜெட் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து விமானத்துறை அமைச்சகம், எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திவருகிறது. அமைச்சகம் என்ன முடிவு எடுக்கிறதோ அதைப்பொறுத்தும் ஸ்பைஸ் ஜெட் எதிர்காலம் அமையும்.
லோக்சபாவில் நேற்று கேள்வியொன்றுக்கு பதிலளித்த விமானத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா, விமான சேவை நிறுவனங்கள், எண்ணை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஸ்பைஸ் ஜெட் ரூ.1230 கோடி பாக்கி வைத்துள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மல்யாவுக்கு நெருக்கடி: தொழிலதிபர் மல்யாவின் கிங்பிஷர் விமான நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், விமானி சஞ்சய் சுதன் என்பவருக்கு அந்த நிறுவனம் ரூ.12.91 லட்சம் சம்பள பாக்கி தர வேண்டியிருந்தது. அவர் டெல்லி கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த கூடுதல் மாவட்ட நீதிபதி ராகேஷ்குமார், சஞ்சய் சுதனுக்கு சம்பளபாக்கியை வழங்குமாறு கிங்பிஷருக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications