காதலை நிராகரித்த மாணவி- விடைத்தாள்களை கிழித்து எறிந்து பழி தீர்த்த மாணவர்
பெல்லாரி: கர்நாடகாவில் தன்னுடைய காதலை நிராகரித்த முன்னாள் தோழியின் விடைத்தாள்களை கிழித்து மாணவர் ஒருவர் பழிதீர்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காகவே விஜயநகர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் திருத்தும் செண்டரில் பகுதி நேர வேலைக்குச் சேர்ந்த அந்த எம்.எஸ்.சி மாணவர், அம்மாணவியின் நான்கு துணைத்தேர்வு விடைத்தாள்களை கிழித்து எறிந்துள்ளார்.
பி. மதுகுமார் என்கின்ற அந்த மாணவரின் இந்த செயலைக் கண்டறிந்த பல்கலைக்கழக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அம்மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
போலீசாரிடம் மதுகுமார் தன்னுடைய குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளார். "அவர் என்னுடைய காதலை நிராகரித்து விட்டார். அதனால் நான் அவரை பழிவாங்க நினைத்தேன். அதனால்தான் நான் அவருடைய விடைத்தாள்களை கிழித்து கழிவறையில் எறிந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
மதுகுமார், அம்மாணவியுடன் பி.எஸ்சி படித்து வந்த போது அவரிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். அவர் மறுத்ததும், அப்பெண்ணை மிகவும் டார்ச்சர் செய்துள்ளார். மதுகுமார் பி.எஸ்சியில் தோல்வியடைந்த நிலையில், அம்மாணவி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி சேர்ந்துள்ளார். இதனையடுத்து ஒருவருடம் கழித்து அங்கு பகுதி நேரமாக சேர்ந்த மதுகுமார் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications