திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரமோற்சவம்: பக்தர்கள் குவிந்தனர்
திருச்சானூர் பத்மாவதி கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்
திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரமோற்சவம் நடத்தப்படுகிறது.
அதேபோல திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை மாதம் பிரமோற்சவம் விமர்சியாக நடத்தப்படுவது உண்டு.

கொடியேற்றம்
இந்த ஆண்டுக்கான கார்த்திகை பிரமோற்சவம் வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மஞ்சள் நிற வஸ்திரத்தில் யானை சின்னம் பொறிக்கப்பட்ட கஜ கொடி ஏற்றப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற கொடி ஏற்ற நிகழ்வை ஏராளமானோர் கண்டு தரிசித்தனர்.

அம்மனுக்கு அபிஷேகம்
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், குங்கும லட்சார்ச்சனையும் நடந்தது. மாலையில் சேனாதிபதியான விஷ்வசேவர் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் ஆகம முறைப்படி அங்குறார்ப்பண நிகழ்ச்சி நடந்தது.

டிசம்பர் 7 வரை
கார்த்திகை பிரமோற்சவம் டிசம்பர் 7-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் காலை, மாலை பத்மாவதி தாயார் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். இன்று இரவு பத்மாவதி தாயார் சின்ன சேஷ வாகனத்தில் மாடவீதியில் உலா வருகிறார்.

பட்டு வஸ்திரம் காணிக்கை
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆந்திர அரசு சார்பில் தாயாருக்கு பட்டு வஸ்திரத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரய்யா காணிக்கையாக வழங்கினார்.












Click it and Unblock the Notifications