அன்று தெலுங்கானாவுக்காக மகன் தற்கொலை .. இன்று தேர்தல் 'சீட்' கேட்டு தாய் தற்கொலை மிரட்டல்!
லோக்சபா தேர்தலுடன் ஒருங்கிணைந்த ஆந்திரா என்ற அடிப்படையில் மாநில சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஆனால் தெலுங்கானா பகுதிகளுக்கும் சீமாந்திரா பகுதிகளுக்கும் தனித்தனி நாட்களில் தேர்தல் நடத்தப்படுகிறது.
இத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சார்பில் தமக்கு வாரங்கல் மாவட்டம் பாலலகுருதி சட்டசபை தொகுதியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தெலுங்கானாவுக்கான தற்கொலை செய்த மாணவர் ஸ்ரீகந்தா சாரியின் தாயார் நேற்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து கேட்டார்.
அதற்கு பதிலளித்த சந்திரசேகர் ராவ், எம்.எல்.சி. சீட் வாங்கித் தருகிறேன் என்று உறுதியளித்திருக்கிறார். ஆனால் ஸ்ரீகந்தா சாரியின் தாயார் சங்கரம்மாவோ, சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும்.. இல்லையெனில் நானும் மகனைப் போலவே தற்கொலை செய்வேன் என்று மிரட்டியிருக்கிறார்.
அத்துடன் செய்தியாளர்களை சந்தித்தும் தமக்கு எம்.எல்.ஏ. சீட் தராவிட்டால் எல்.பி.நகரில் தற்கொலை செய்துகொள்வேன் என்றார். இதனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைமையகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.