சீனாவுடன் ராணுவ உறவு கிடையாது.. இலங்கை பிரதமர் திட்டவட்ட அறிவிப்பு
டெல்லி: சீனாவுடன் இலங்கைக்கு ராணுவ உறவு கிடையாது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு நேற்று வருகை தந்தார். டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை ரணில் விக்ரமசிங்கே மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மதியம், பிரதமர் மோடியுடன் அவர் சந்திப்பு நடத்தினார். பின்னர் டெல்லியில் நிருபர்களிடம் ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது:
சார்க் மாநாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து பேச வேண்டியது அவசியமானது. பிற நாடுகள் சார்க் மாநாட்டை புறக்கணித்ததால் இலங்கையும் மாநாட்டை புறக்கணித்தது. பரஸ்பரம் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், சார்க் அமைப்பு செயலிழந்து விடும்.
சீனாவுடன் இலங்கை பொருளாதார உறவுகளை மட்டுமே வைத்துக் கொண்டுள்ளது. சீனாவுடன் ராணுவ உறவை இலங்கை வைத்துக்கொள்ளவில்லை.
இந்தியா-பாகிஸ்தான் நடுவே போர் தீர்வு கிடையாது. பதற்றத்தை குறைக்க நரேந்திர மோடிய உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.
சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்திய பாதுகாப்புக்கு இலங்கை குந்தகம் விளைவிப்பதாக தமிழ் அமைப்புகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ரணில் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.