விவசாயிகளை விட ஆர்.கே.நகர் பற்றிதான் முதல்வர், அமைச்சர்களுக்கு அக்கறை - ஸ்டாலின்
டெல்லியில் போராடும் விவசாயிகளை விட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீதுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக அக்கறை உள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி: விவசாயிகளின் பிரச்சினையை தீர்ப்பதை விட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீதுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக அக்கறை உள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக விவசாயிகளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, திமுக எம்.பி.க்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகளுடன் அமர்ந்து மு.க.ஸ்டாலின் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதி ரூ.40,000 கோடி வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 90 விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப், உத்தரப்பிரதேச விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஜனாதிபதி, மத்திய நிதி அமைச்சர் ஆகியோரை விவசாயிகள் சந்தித்து பேசியும் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை.
19வது நாளாக போராட்டம்
விவசாயிகளின் போராட்டம் 19வது நாளாக நீடிக்கிறது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது ராஜ்யசபா எம்பிக்கள் டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜாவும் அவருடன் இருந்தனர். போராட்ட களத்தில் தரையில் அமர்ந்து பேசினார் ஸ்டாலின்.
அக்கறையில்லை
தமிழக விவசாயிகள் மீது மத்திய மாநில அரசுகளுக்கு அக்கறையில்லை என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின், ஆளும் அதிமுக அரசுக்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலைப்பற்றிதான் கவலை அதிகம் உள்ளதாக குற்றம் சாட்டினார்.
ஆர்.கே. நகர் தேர்தல் பிரச்சாரம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு வந்து விவசாயிகளுடன் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவருக்கும், அமைச்சர்களுக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்யவே நேரம் சரியாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
திமுக நடவடிக்கை
தமிழக நிதியமைச்சர் விவசாயிகளிடம் பேசும் போது திமுகவை குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் விவசாயிகளின் கடன்களை கடன்களை ரூ.7000 கோடி தள்ளுபடி செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்று ஸ்டாலின் தெரிவித்தார். விவசாயிகளின் பிரச்சினை தீர்க்க திமுக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் என்றார்.
பிரதமர் பேச வேண்டும்
கடந்த 19 நாட்களாக போராடிவரும் விவசாயிகளை பாதுகாக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், உத்தரபிரதேசம் போல தமிழகத்திலும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.