சசி முதல்வராக பதவியேற்க தடை விதிக்கக் கோரிய மனு - அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
சசிகலா பதவியேற்புக்கு தடை விதிக்கக் கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி: சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் முன் சசிகலா பதவியேற்க தடை விதிக்கக் கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அக்கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக பிப்ரவரி 5ஆம் தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து, அவர் விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டது.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். ஆளுநரும், ஓ.பன்னீர் செல்வத்தின் ராஜினாமா ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக நீதிமன்றம், அவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து தீர்ப்பு வெளியிடும் வரை சசிகலா முதல்வராக பதவியேற்கக் கூடாது எனவும், அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமானம் செய்து வைக்க தடை விதிக்கக் கோரியும் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினர் உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
சசிகலா முதல்வராக பதவியேற்று, அதன்பின் வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் மீண்டும் அதிமுகவினரால் தமிழகத்தில் இயல்புநிலை பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம். எனவே இந்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை சசிகலா முதல்வராக பதவி ஏற்கக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வக்கீல் மணி, நேற்று உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் முறையிட்டார். இதையடுத்து, வழக்கை நாளை விசாரணை பட்டியலில் சேர்ப்பதாக பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.