குஜராத்தில் ரூ. 3,000 கோடியில் பட்டேல் சிலை.. உருவாக்கும் எல் அண்ட் டி நிறுவனம்!!
காந்தி நகர்: குஜராத்தில் உலகிலேயே மிகப் பிரம்மாண்டமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை உருவாக்கும் ஒப்பந்தத்தை எல் அண்ட் டி நிறுவனம் பெற்றுள்ளது.
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைப் போல 2 மடங்கு உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்கும் பணியைத் தொடங்கினார். இதற்காக நாடு முழுவதும் இரும்பு பொருட்களை சேகரிக்கும் பிரசாரத்தையும் நடத்தினார்.
பின்னர் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்ற நிலையில் மத்திய அரசு பட்டேல் சிலை அமைக்க ரூ200 கோடி நிதியை குஜராத்துக்கு ஒதுக்கியது.
குஜராத்தில் பாரூச் என்ற இடத்தில் பட்டேலுக்கு சர்தார் சரோவர் அணை அருகே 597 அடி உயரத்தில் "ஒற்றுமையின் சின்னமாக" இந்த சிலை அமைக்கப்படுகிறது. பிரதமர் மோடியுடன் பாஜக மூத்த தலைவர் அத்வானி கடந்த அக்டோபர் 31-ந் தேதி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் குஜராத்தில் முதல்வர் ஆனந்திபென் முன்னிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பட்டேல் சிலையை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை முன்னணி கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி பெற்றுள்ளது. மொத்தம் ரூ3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பட்டேல் சிலை உருவாக்கப்படுகிறது.