நாடகமாடாமல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் அறிவுரை
மும்பை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் நிருபம் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நேற்று 144 தடையை மீறி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்கள் , உள்துறை அமைச்சர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் பொது செயலாளர் சஞ்சய் நிருபம் நேற்று மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, " கெஜ்ரிவால் முதலில் நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவர் (கெஜ்ரிவால்) ஒரு முதலமைச்சர் என்பதால் இதுபோன்ற பிரச்சினைகளை மத்திய அரசுடன் எளிதில் கலந்து பேசி விரைவில் முடிவுக்கு கொண்டு வரலாம்.

டெல்லி மக்கள் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுவதை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விரும்பாது. இந்த தருணத்தில், நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டிய முழுபொறுப்பும் ஆம் ஆத்மி கட்சியினருக்கு இருக்கிறது. ஆனால் அவர்கள் அதை செய்யாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதன் மூலம் அவர்களுக்கு நிர்வாகதிறனில் போதிய அனுபவமும், புரிந்து கொள்ளும் திறனும் இல்லை என்பது தெரியவருகிறது' என இவ்வாறு சஞ்சய் நிருபம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications