பாஜவிடம் குறைகளை தேடாமல், உங்கள் தலைவர் எங்கே என்று தேடுங்கள்..காங்.கிற்கு அமித்ஷா பதிலடி!
பெங்களூரு: பாரதிய ஜனதா அரசில் குறைகளை தேடுவதற்கு பதிலாக காணாமல் போனவரை தேடுங்கள் என்று காங்கிரஸ் கட்சியை பார்த்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கடுமையாக விமர்சித்து உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தை கட்சியின் தலைவர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் முதல்வர்கள், அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 100 பேர் இதில் கலந்து கொண்டு உள்ளனர்.
பெங்களூருவில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சியின் அரசின் குறைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்வதற்கு பதிலாக, காங்கிரஸ் கட்சி காணாமல் போன தலைவரை தேட வேண்டும் என்று கூறினார். நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் பெரும் போர்க்கொடி தூக்கி உள்ளது. சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி பொய் பிரச்சாரம் நடத்தி வருகிறது. உண்மையிலேயே, அது விவசாயிகளுக்கு ஆதரவான சட்டமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறுகையில், "கடந்த 60 வருட காலமாக விவசாயிகளிடம் கொள்ளையடித்து வந்த காங்கிரஸ் கட்சியால், விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டம் மாற்றப்படுவதை சகித்துக்கொள்ள முடியவில்லை" என்றார்.
விடுமுறையில் சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இதுவரையில் எங்கு இருக்கிறார் என்று தெரிவிக்கப்படவில்லை. அவர் விரைவில் வருவார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்து உள்ளார். இதைத்தான் அமித்ஷா குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.