பெங்களூர்: பைக் திருடர்களை விரட்டி சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தி கொலை
பெங்களூர்: பைக் திருடர்களை பிடிக்க விரட்டி சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடர்களின் இந்த தாக்குதலில் கான்ஸ்டபிள் ஒருவருக்கும் வயிற்றில் கத்திகுத்து விழுந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
பெங்களூரின் புறநகரான, தொட்டபள்ளாப்புரா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர், ஜெகதீஷ் (32). அப்பகுதியில் நடந்த பைக் திருட்டு ஒன்று தொடர்பாக, கிருஷ்ணா மற்றும் மது ஆகிய இரு திருடர்களை பிடிக்க நான்கு கான்ஸ்டபிள்களுடன் இன்று காலை ஜெகதீஷ் ரோந்து சென்றார்.
நெலமங்களா பகுதியிலுள்ள கிராபைட் தொழிற்சாலை அருகே, திருடர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். தப்பியோட முடியாது என அறிந்ததும், திருடர்கள், போலீசார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்த தொடங்கினர். கத்தியை எடுத்து அதில் ஒருவன் குத்தியதில், ஜெகதீஷ் மார்பில் காயம்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
வெங்கடேசமூர்த்தி, என்ற கான்ஸ்டபிளுக்கு வயிற்றில் கத்தி குத்து விழுந்தது. ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெங்கடேசமூர்த்தி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.