5ம் வகுப்பு வரை தேர்வே நடத்தக் கூடாது... மத்திய அரசுக்குப் பரிந்துரை
டெல்லி: பள்ளிகளில் 5ம் வகுப்பில் இருந்து தான் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு நடத்திய டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
புதிய கல்விக் கொள்கைகளை வகுக்க பரிந்துரைகள் செய்யும் வகையில் முன்னாள் கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. டெல்லி அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சைலஜா சந்திரா, டெல்லி அரசின் முன்னாள் உள்துறை செயலாளர் சேவாராம் சர்மா, குஜராத் அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சுதிர் மன்கத் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குனர் ஜே.எஸ்.ராஜ்புத் ஆகியோர் அந்த குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

அந்த குழு பல கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று, கல்வியாளர்களை சந்தித்து பேசி, தங்களுக்கு வந்த பரிந்துரைகள், கோரிக்கைகளை ஆய்வு செய்து மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் உள்ள சில பரிந்துரைகள் குறித்து தகவல் கிடைத்துள்ளன. அதன் விபரம் வருமாறு,
8ம் வகுப்பு வரை மாணவர்களை ஃபெயிலாக்கக் கூடாது என்று கூறும் கல்வி உரிமைச்சட்டத்தை சீரமைத்து 4ம் வகுப்பு வரை மாணவர்களை ஃபெயிலாக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு 5ம் வகுப்பில் இருந்து தான் தேர்வு நடத்த வேண்டும். தேர்வில் தோல்வி அடையும் மாணவ, மாணவியருக்கு மேலும் 2 வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
மாணவர்களின் திறனை மேம்படுத்துதல் மற்றும் தொழிற்கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
உயர் கல்வி தரத்தில் பல இந்திய நிறுவனங்களால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. அதனால் கட்டுப்பாடுகளுடன் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications