சிறுமி பலாத்கார வழக்கு: சாமியார் ஆசாராம் பாபு ஜாமீனுக்காக மும்முரமாக முயற்சிக்கும் சு.சுவாமி!!
டெல்லி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 19 மாதம் சிறையில் இருந்து வரும் சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமீனுக்காக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மும்முரமாக முயற்சித்து வருகிறார்.
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 75 வயதான சாமியார் ஆசாராம் பாபு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Asaram Bapu's bail Application will be argued by me when his Ashram people stop demanding amendments.
— Subramanian Swamy (@Swamy39) June 3, 2015
இந்த வழக்கில் ஆசாராம் பாபு மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையில் 121 ஆவணங்களும் 58 சாட்சிகளின் வாக்குமூலங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
சிறுமியை பலாத்காரம் செய்தது, பெண்களுக்கு எதிராக தவறாக நடந்து கொண்டது, குற்றச்சதி, கடத்தல், குற்றத்தை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் ஆசாராம் பாபுவுக்கு கிடைக்கும்.
அவரது ஜாமீனுக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, சல்மான் குர்ஷித் என பலரும் போராடிப் பார்த்தனர். ஆனாலும் நடக்கவில்லை. தற்போது ஆசாராம் பாபுவுக்காக தாம் ஆஜராகி வாதாடப் போவதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட லாலு பிரசாத், ஜெயலலிதாவுக்கெல்லாம் ஜாமீன் கிடைக்கும் பாது ஆசாராம் பாபு மட்டும் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என்றும் சுவாமி கேள்வி எழுப்பியும் இருந்தார்.
@Swamy39 S. Swamy- Asaram Bapu Ji's case is 100% false & bogus, it is a conspiracy #निर्दोष_बापूजीको_न्यायमिले pic.twitter.com/JFREhtpoSY
— Vikas Katewa (@vikaskatewa4) June 3, 2015
அதேபோல் கடந்த மாதம் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆசாராம் பாபுவின் ஜாமீனுக்காக சுப்பிரமணியன் சுவாமியின் உதவியாளர்கள் முயற்சியும் மேற்கொண்டனர். இந்த நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று, ஆசாரம் பாபுவின் ஆதரவாளர்கள் நிபந்தனைகளை தொடர்ந்து விதிப்பதை நிறுத்தும் போது நான் அவரது ஜாமீனுக்காக வாதாடுவேன் எனவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான வாதங்கள் தொடர்கின்றன. ஆசாராம் பாபுவின் ஆதரவாளர்கள் இந்த வழக்கே 100% பொய்யானது எனவும் கூறி வருகின்றனர்.