சூறைக்காற்றுடன் திடீர் மழை.. ஆந்திர முதல்வர் பங்கேற்ற கோவில் விழாவில் மேடை சரிந்து 4 பேர் பலி
ஆந்திராவில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் கோவில் நிகழ்ச்சியில் போடப்பட்டிருந்த மேடை சரிந்து 4 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video

கடப்பா: ஆந்திராவில் திடீர் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் முதல்வர் சந்திரபாபுநாயுடு பங்கேற்ற கோவில் நிகழ்ச்சியில் போடப்பட்டிருந்த மேடை சரிந்து 4 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம நவமி பிரமோற்சவம் கடந்த 24ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக நேற்று இரவு சீதா, ராமர் திருக்கல்யாணம் நடந்தது.
இதையொட்டி, பட்டு வஸ்திரங்களை வழங்க ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடப்பா வந்தார். தொடர்ந்து, மாலை 6 மணி முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

மேடை சரிந்தது
இதில், திருக்கல்யாணத்துக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை மற்றும் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடைகளும், பிரமாண்டமான ப்ளக்ஸ் போர்டுகளும் சரிந்து கீழே விழுந்தது.

இருளில் மூழ்கியது
மேலும், கோயிலுக்கு அருகே இருந்த மரங்களும் வேறோடு சாய்ந்தன. இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அப்பகுதி இருளில் மூழ்கியது.

4 பேர் பலி
இந்நிலையில் அன்னதானம் வழங்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்ததில் ஒரு பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 52 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 25 பேர் சிகிச்சைக்காக கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
|
சின்னாபின்னம்
இதனிடையே முதல்வர் சந்திரபாபு நாயுடு இரவு 8.30 மணிக்கு சீதா, ராமருக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார். சீதா, ராமர் திருக்கல்யாணத்தையொட்டி கடந்த 10 நாட்களாக 1 கோடி செலவில் தேவஸ்தானம் சார்பில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், திடீரென பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் ஒண்டிமிட்டா பகுதி சின்னாபின்னமாக காட்சியளித்தது.












Click it and Unblock the Notifications