'சூட்- பூட் சர்க்கார்" விமர்சனம்.. ராகுலை கோவணம் கட்ட சொல்லுது சிவசேனா!
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 'கோவணத்தை' கட்டிக் கொண்டு எளிமையின் உதாரணமாக டெல்லி இந்தியா கேட் முன் நிற்கட்டும் என்று சிவசேனா கடுமையாக தாக்கியுள்ளது.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கம்:
56 நாட்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு ராகுல் பேசத் துவங்கியுள்ளார். அவரது கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அவர் பேச முயல்கிறார்.
ஆனால் மோடி எனும் மிகப்பெரிய அலைக்கு எதிரே 100 ராகுல்கள் வந்தாலும் நிற்க முடியாது. ஸ்பெக்ட்ரம் அலைகற்றை, சுரங்க முறைகேடு போன்ற ஊழல்களை செய்து சூட்கேஸ் நிரப்பியவர்களை 'சூட்கேஸ் சர்க்கார்' என்று பிரதமர் மோடி தெரிவித்தது முற்றிலும் உண்மையானது.
நிலக்கரி சுரங்கம், ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்களால் காங்கிரஸ் சூட்கேஸ்களை நிரப்பியது போல மோடி அரசு ஏதும் செய்யவில்லை.
பிரதமர் மோடியை சூட்-பூட் அரசு என்று தொடர்ந்து ராகுல் விமர்சிக்கிறார். அப்படியானால் இந்தியாவின் தொழிலதிபர்கள் கோவணம் கட்ட வேண்டும் என்று நினைக்கிறதா காங்கிரஸ்?
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அகமது பட்டேல் போன்றவர்களும் கோவணத்தைக் கட்டிக் கொண்டு டெல்லி இந்தியா கேட் முன் நின்று முன்னுதாரண புருஷர்களாக நிற்க வேண்டியதுதானே?
காங்கிரஸ் விருப்பப்பட்டால் பாரதிய ஜனதாவுடன் நெருக்கமான ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் சொந்த பணத்தில் காங்கிரசாருக்கு கோவணத்தை வாங்கி அன்பளிப்பாகவும் அளிப்பார்கள்..
இவ்வாறு சாம்னா ஏடு சாடியுள்ளது.