சுனந்தாவின் குடல் மாதிரியை அமெரிக்கா அல்லது இங்கிலாந்துக்கு அனுப்பும் டெல்லி போலீஸ்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் உடலில் இருந்த விஷத்தை கண்டுபிடிக்க அவரது உள் உறுப்பு, குடல் மாதிரிகளை பரிசோதனைக்காக இங்கிலாந்து அல்லது அமெரிக்காவுக்கு டெல்லி போலீசார் அனுப்ப உள்ளனர்.
டெல்லியில் உள்ள லீலா ஹோட்டலில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் இறந்து ஓராண்டு ஆன பிறகு அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் கமிஷனர் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சுனந்தாவுக்கு விஷம் வாயில் ஊற்றப்பட்டதா அல்லது ஊசி மூலம் ஏற்றப்பட்டதா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. சுனந்தா உடலில் கதிர்வீச்சு தன்மை உள்ள பொலோனியம் 210 விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாம்பு விஷமும் அவரது உடலில் இருந்துள்ளது. அவரது உடலில் இருந்த சில ரசாயனங்கள் இந்தியாவில் உள்ள ஆய்வகங்களில் கண்டுபிடிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து சுனந்தாவின் உள் உறுப்பு, குடல் மாதிரிகள் பரிசோதனைக்காக இங்கிலாந்து அல்லது அமெரிக்காவில் உள்ள எப்.பி.ஐ. ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுனந்தாவின் பிரேத பரிசோதனை இறுதி அறிக்கை கடந்த 29ம் தேதி போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அளிக்கப்பட்ட அறிக்கையில் சுனந்தாவின் உடலில் ஊசி போட்ட தடம் உள்பட 12 இடங்களில் காயம் மற்றும் பல்லால் கடித்த தடம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சுனந்தாவின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு சசி தரூர், அவரது உறவினர்கள், சுனந்தா இறந்து கிடந்த ஹோட்டல் ஊழியர்களை விசாரிக்க உள்ளது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications