திரித்து எழுதும், பொறுப்பற்றவர்கள்: மீடியாக்களை விளாசிய சசி தரூர்
டெல்லி: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு பற்றி வாய் திறக்காமல் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தனது பெயரை கெடுக்க மீடியாக்கள் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் அண்மையில் அறிவித்தனர். இது குறித்து தரூரிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டபோது அவர் பதில் அளிக்கவே இல்லை.
இந்நிலையில் அவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த இலக்கிய விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
மீடியாக்கள் அதிலும் குறிப்பாக செய்தி தொலைக்காட்சி சேனல்கள் நான் கூறுவதை மாற்றி தெரிவித்து, எனது பெயரை கெடுக்கின்றன. இது பொறுப்பற்ற செயல். 90 சதவீத பத்திரிக்கையாளர்கள் நான் கூறுவதை ஒழுங்காக பதிவு செய்வது இல்லை. இங்கு பேசுவது பற்றி நாளை செய்தித்தாளில் செய்தி வந்தாலும் நிச்சயம் அது என்னைப் பற்றி தவறானதாக தான் எழுதப்பட்டு வரும் என்றார்.
இதற்கிடையே தரூரும், சுனந்தாவும் சண்டை போட்ட ஏர் இந்தியா விமானத்தின் ஊழியர்களிடம் டெல்லி போலீசார் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.