அதிகப்படியான மாத்திரைகளே மரணத்திற்கு காரணம்... சுனந்தா பிரேதப் பரிசோதனை அறிக்கை தகவல்
டெல்லி: மன அழுத்தத்திற்கான மாத்திரைகளை அதிக அளவு சாப்பிட்டதாலேயே மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் நிகழ்ந்திருப்பதாக அவரது பிரதே பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மத்திய அமைச்சரும், தனது கணவருமான சசி தரூர் பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மெஹருடன் பழகி வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார் அவரது மனைவி சுனந்தா புஷ்கர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் சுனந்தா.
அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையை மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பித்துள்ளனர். அதன்படி, சுனந்தா அதிகளவு மாத்திரை எடுத்துக் கொண்டதே மரணத்திற்குக் காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்த பிரச்சினை....
சுனந்தாவின் மரணத்திற்கு முந்தைய சில நாட்களாக சசி தரூருக்கும், அவருக்கும் இடையே பிரச்சினையும், வாக்குவாதமும் நடந்து வந்ததால், அவரின் மரணம் பல சந்தேகங்களை ஏற்படுத்தியது.
குற்றச்சாட்டு....
அதற்குத் தகுந்த படி, பாஜக சுனந்தாவின் மரணம் முன்கூட்டியே திட்டமிட்ட கொலை எனக் குற்றம் சாட்டியது.
சர்ச்சை....
கடந்த சனியன்று சுனந்தாவின் பிரேத பரிசோதனையை 3 டாக்டர்கள் கொண்ட மருத்துவக்குழு நடத்தியது. அதில், சுனந்தாவின் மரணம் இயற்கையானது அல்ல, அவரது உடலில் காயங்கள் உள்ளது எனக் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், சுனந்தாவின் மரணம் குறித்து சர்ச்சை உண்டானது.
பிரேத பநிசோதனை அறிக்கை....
இந்நிலையில், சுனந்தாவின் பிரேதபரிசோதனை அறிக்கை நேற்று சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அலோக் சர்மாவிடம் ஒப்படைக்கபட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை விவரங்களை வெளியிட மறுத்த சர்மா, ‘தரூர்,சுனந்தாவின் சகோதரர் மற்றும் பல்வேறு நபர்களிடம் நடத்தபட்ட விசாரணை அறிக்கைகளையும் ஆராய வேண்டி உள்ளது .அதன் அடைப்படையில் மரணத்திற்கு என்ன காரணம் என்ன என்ற முடிவுக்கு வரப்படும். மேலும் போலீசார் விசாரணை நடத்த வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து போலீசார் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அதிகளவு மருந்து....
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சுனந்தா புஷ்கர் அதிகளவு மருந்தை உட்கொண்டதால் தான் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது கொலையா தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து போலீசார் மேற்கொள்ளும் விசாரணையில் தெரிய வரும்.
காயங்கள்....
முகம் மற்றும் கைகள் உள்பட அவரது உடலில் 12 இடங்களில் காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் முன்பு தெரிவித்திருந்த தகவல் குறித்து தெளிவான தகவல் இல்லை.
மாத்திரை அட்டைகள் மீட்பு....
சுனந்தாவின் சடலம் மீட்கப்பட்ட ஓட்டல் அறையில் துணை கலெக்டர் மற்றும் போலீசார், சோதனை செய்த போது மன அழுத்தத்திற்கான தூக்க மாத்திரை அட்டைகள் மீட்கபட்டதாக வெளியான தகவல் குறிப்பிடத்தக்கது.
கோமா... மரணம்
மேலும், சுனந்தாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் மரணத்திற்கு முன்னர் 30 க்கும் அதிகமான மன அழுத்தத்திற்கான மாத்திரைகள் சாப்பிட்டு இருக்கலாம் என்றும், அதன் மூலம் நினைவிழந்து கோமா நிலைக்கு சென்ற அவர் மரணமடைந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.