சுனந்தா மரணத்திற்குக் காரணம் விஷம் - காரணத்தைக் கண்டறிய போலீஸுக்கு உத்தரவு
டெல்லி: மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவின் மரணத்திற்குக் காரணம் விஷம் என்று இந்த வழக்கை விசாரித்து வந்த துணைக் கோட்டாட்சியர் அலோக் சர்மா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணத்தைக் கண்டறியுமாறும், இந்த வழக்கை கொலை அல்லது தற்கொலை என்ற கோணத்தில் விசாரிக்குமாறும் காவல்துறைக்கு அவர் அளித்துள்ள அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை துணைக் கோட்டாட்சியர் அலோக் சர்மாவிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டதால் மரணம் சம்பவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் உடலில் 12க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, உயிரிழப்புக்கு முன்பு சுனந்தா போராடியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து விசாரணை நடத்திய அலோக் சர்மா தனது பரிந்துரை அறிக்கையை காவல்துறையிடம் தற்போது சமர்ப்பித்துள்ளார். விஷமே சுனந்தாவின் மரணத்திற்குக் காரணம் என்றும், இது எப்படி ஏற்பட்டது என்பதைக் கண்டறியுமாறும், இந்த வழக்கை கொலை அல்லது தற்கொலை என்ற கோணத்தில் விசாரிக்குமாறும் அவர் காவல்துறைக்குப் பரிந்துரைத்துள்ளார்.
சசி தரூர் அப்பாவி-போலீஸ்
இந்த நிலையில் சுனந்தா மரண வழக்கில் அவரது கணவரான மத்திய அமைச்சர் சசி தரூருக்குத் தொடர்பு இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனந்தா மரணமடைவதற்கு 2 மணி நேரத்திற்கு அவரை நேரில் பார்த்த ஒரு சாட்சி அளித்த வாக்குமூலத்தின் அடிப்பையில் இந்த முடிவுக்கு காவல்துறை வந்துள்ளதாம்.
முன்னதாக இந்த வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக டெல்லி காவல்துறையை கட்டுப்படுத்தி வரும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அதாவது உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கு சசி தரூர் கடிதம் எழுதியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications