புதிய வரலாறு.. சபரிமலையில் அனைத்துப் பெண்களும் வழிபட சுப்ரீம்கோர்ட் அனுமதி!
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
Recommended Video

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. காலம் காலமாக ஐயப்பன் கோவிலில் இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தன. இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.
[சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை சாதாரணம் இல்லை.. விரத முறைகள் என்ன தெரியுமா?]
அப்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிப்பது பாகுபாடு ஆகாதா? அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகாதா? என்பது உள்ளிட்ட 5 கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது.
இந்த கேள்விகள் குறித்து அரசியல் சாசன அமர்வு முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்து, அரசியல் சாசன அமர்வுக்கு மனுக்கள் பரிந்துரைக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட், இந்து மல்கோத்ரா ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு தொடர்ச்சியாக 8 நாள்கள் விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அதன்படி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. ஆணும், பெண்ணும் சமம். வழிபாட்டிலும் இது தொடர வேண்டும். சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம், அதைத் தடுப்பது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தார்.
அனைத்துப் பெண்களும் வழிபடலாம் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கான்வில்கர், ஆர்.எப் நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகியோர் தீர்ப்பளித்தனர். நீதிபதி இந்து மஹ்லோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை எழுதியுள்ளார்.
இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது. மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இனி பெண்கள் எந்தவித தடையும் இல்லாமல் செல்லும் வாய்ப்பும் கூடி வந்துள்ளது.












Click it and Unblock the Notifications