உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடுவேயான பிரச்சினை முடிவுக்கு வந்தது: பார் கவுன்சில் அறிவிப்பு
Recommended Video
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் 4 நீதிபதிகளுக்கு இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும், வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் இருப்பதாகவும் குற்றம்சாட்டி, கடந்த வெள்ளிக்கிழமை செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோக்கூர் ஆகிய 4 சீனியர் நீதிபதிகள் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.
இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக நீதிபதிகள் இவ்வாறு நிருபர்களை சந்தித்து பேட்டியளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பார் கவுன்சில் தலைவர் பேட்டி
கடந்த சில தினங்களாக இப்பிரச்சினை தேசிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகியது. டிவி சேனல்களில் இதுகுறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இதுபற்றி அறிக்கை மூலம் விளக்கம் அளிப்பார் என சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அதுபோல எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில், டெல்லியில், இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தார் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா.
நீதிபதிகளுடன் ஆலோசனை
நீதித்துறையில் நிகழ்ந்த இந்த நிகழ்வுகளையடுத்து, இந்திய பார் கவுன்சில் இதில் தலையிட்டது. நாங்கள் சுமார் 15 மூத்த நீதிபதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். எல்லோருமே, தலைமை நீதிபதி மற்றும் 4 நீதிபதிகள் நடுவேயான பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் தங்களுக்குள்ளாகவே பேசி இந்த விவகாரத்தை சரி செய்து கொண்டனர்.
அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்
இந்த நிகழ்வில் இருந்து அரசியல் ஆதாயம் தேட அரசியல் கட்சிகள் முயல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இது உள் விவகாரம். அதுவும் இப்போது சரியாகிவிட்டது. உச்சநீதிமன்றத்தின் மாண்பு மதிக்கப்பட வேண்டும். பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் அனைத்து வகை நடவடிக்கையையும் எடுத்துள்ளோம்.
நடவடிக்கை தேவையில்லை
நான்கு நீதிபதிகளுமே, வழக்கு விசாரணை பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை. நான்கு நீதிபதிகளுமே, நேர்மையானவர்கள் என்பதை அறிந்துள்ளோம். சிலர் தங்களது தனிப்பட்ட விஷயங்களை புகுத்த பார்த்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தாமதமாக ஆரம்பித்த விசாரணை
உச்சநீதிமன்றம் இன்று காலை 9 நிமிடங்கள் தாமதமாக, காலை 10.39 மணிக்கு அலுவலை தொடங்கியது. நீதிபதிகள் தங்களுக்குள் இந்த விவகாரம் குறித்து அந்த நேரத்தில் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், பார் கவுன்சில் தலைவர் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.