விஷ்ணுபிரியா மரண வழக்கை சிபிஐ விசாரிக்கலாம்- தமிழக அரசின் அப்பீல் மனு சுப்ரீம்கோர்ட்டில் டிஸ்மிஸ்!!
டெல்லி: திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விஷ்ணுபிரியாவின் மரண வழக்கை சிபிஐ விசாரிப்பதில் இருந்த தடை நீங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.யாக பணியாற்றியவர் விஷ்ணுபிரியா. இவர் மர்மான முறையில் இறந்த தலித் இளைஞர் கோகுல்ராஜின் கொலை வழக்கை விசாரித்து வந்தார். திடீரென கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி தான் தங்கி இருந்த வீட்டில் துப்பாட்டாவில் விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை அவரது தோழி மகேஸ்வரியும், பெற்றோர்களும் எழுப்பினார்கள். மேலும் அவரது தந்தையான ரவி விஷ்ணுபிரியாவின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளின் நெருக்கடியால்தான் விஷ்ணுபிரியா மரணமடைந்திருப்பதாகவும் கூறி விஷ்ணுபிரியாவின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் விஷ்ணுபிரியாவின் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை ஏற்க மறுத்த தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷ்ணுபிரியாவின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications