வியாபம் ஊழல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: 40க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்ட 'வியாபம்' ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், மத்தியப் பிரதேச ஆளுநரை நீக்கக் கோரும் விவகாரத்தில், அம்மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தும் மத்தியப் பிரதேச தொழில்கல்வி வாரியத்தில் (வியாபம்) கடந்த 2004ம் ஆண்டு முதல் நடைபெற்ற நுழைவுத் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மெகா மோசடியில் தொடர்புடைய பலர் மர்மமான முறையில் இறந்தனர்.

மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவ் உள்பட இந்த மோசடியில் தொடர்புடைய பலர் மர்மமான முறையில் உயிரிழந்தது நாடுமுழுவதும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது.
வியாபம் முறைகேட்டில் தொடர்புடைய இளம்பெண் ஒருவர் ரயில்வே பாதை அருகே மர்மமான முறையில் கடந்த 2012ம் ஆண்டு உயிரிழந்து கிடந்தார். அப்பெண்ணின் பெற்றோரிடம் அண்மையில் பேட்டியெடுத்துக் கொண்டிருக்கும்போதே செய்தியாளர் அக்ஷய் சிங் திடீரென வாயில் நுரைதள்ளி இறந்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மறுநாளே மருத்துவக் கல்லூரி டீன் அருண் சர்மா இறந்தது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. 'வியாபம்' ஊழல் தொடர்பாக இதுவரை 46 பேர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் மனு
இந்நிலையில், வியாபம் முறைகேடு வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ஆஷிஷ் சதுர்வேதி, டாக்டர் ஆனந்த் ராய் மற்றும் பிரசாந்த் பாண்டே உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு
இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், வியாபம் ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டனர். இந்த ஊழல் குறித்த விசாரணைக்கு சிபிஐ அமைப்பு தயாராக இருப்பதாக அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் வரும் 24ம் தேதிக்குள் சி.பி.ஐ தனது பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆளுநர் நீக்கம் - நோட்டீஸ்
அதேபோல், வியாபம் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவை நீக்கம் செய்வது குறித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்தியப் பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுக்கும், ஆளுநருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கொலை வழக்காக மாற்றம்
அடுத்தடுத்த மர்ம மரணங்களால் ஊழல் வழக்காக இருந்த வியாபம் வழக்கு, மெகா கொலை வழக்காக மாறி வருகிறது. பொதுநல மனுக்களை ஏற்று, வியாபம் வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பல திடுக்கிடும் தகவல்கள் இந்த வழக்கில் வெளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் வரவேற்பு
வியாபம் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications