'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தில் திமிர் பேட்டி: 2 வக்கீல்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: இந்தியாவின் மகள் ஆவணப்படத்தில் பேட்டியளித்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு நிர்பயாவை சீரழித்தவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா மைனர் உள்பட 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்து தாக்கப்பட்டதில் பலியானார். இந்நிலையில் லெஸ்லீ லுட்வின் என்பவர் நிர்பயா பற்றி இந்தியாவின் மகள் என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்தார்.
அந்த ஆவணப்படத்தில் நிர்பயாவை சீரழித்த முகேஷ் சிங்கின் பேட்டி உள்ளது. அந்த பேட்டியில் முகேஷ் பலாத்காரத்திற்கு நிர்பயா தான் காரணம் என்று கூறியதுடன், அவர் மட்டும் அமைதியாக இருந்திருந்தால் பலாத்காரம் செய்துவிட்டு தாக்கியிருக்க மாட்டோம் என்று திமிராக தெரிவித்திருந்தார். அந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்தது.

ஆவணப்படத்தில் தோன்றிய குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் அஜய் பிரதாப் சிங் மற்றும் மனோகர் லால் சர்மா ஆகியோரும் நிர்பயாவை தான் குறைகூறியிருந்தனர். இந்நிலையில் அஜய் மற்றும் மனோகர் ஆகியோர் நீதிமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும், அவர்கள் தங்களின் பேட்டிக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறி உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அஜய் மற்றும் மனோகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் பற்றி கருத்து தெரிவிக்க அஜய் மறுத்துவிட்டார்.
இது குறித்து மனோகர் கூறுகையில்,
நான் ஒன்றும் பெண்களுக்கு எதிரானவன் அல்ல. எனக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் எதுவும் வரவில்லை. வந்தால் பதில் அளிப்பேன். மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக போராடி வருகிறேன். எந்த பெண்ணுக்கும் எதிராக நான் போராடவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications