ஜெயலலிதா ஜாமீன் மனு மீது வெள்ளிக்கிழமை தான் விசாரணை- உச்ச நீதிமன்றம்
டெல்லி: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை அவசர வழக்காக கருத முடியாது என்று கூறிவிட்ட உச்சநீதிமன்றம், வரும் 17ம் தேதி வெள்ளிக்கிழமை மனு மீது விசாரணை நடத்துவதாக அறிவித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் குற்றவாளி என்று அறிவித்தது.

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 7ம் தேதி கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அவரை ஜாமீனில் விட முகாந்திரம் இல்லை என்று கூறி ஜாமீன் மனுவை நீதிபதி சந்திரசேகரா தள்ளுபடி செய்தார். இதையடுத்து கடந்த 9ம்தேதி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச் பரிசீலனைக்கு இன்று வந்தது. ஹைகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி ஆஜராகியும், ஜாமீன் கிடைக்காததால் வெறுப்பிலுள்ள ஜெயலலிதா தரப்பு, தற்போது மற்றொரு மூத்த வக்கீல் பாலி நாரிமனை ஜெயலலிதாவுக்காக வாதிட ஏற்பாடு செய்துள்ளது.
இன்று தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் முன்பாக பாலி நாரிமன் ஆஜராகி, தனது கட்சிக்காரரின் மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வேறு எந்த மாதிரியான வாதத்தையும் அவர் முன்னெடுக்கவில்லை.
அதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் வக்கீல்களும் தங்கள் கட்சிக்காரர்கள் மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து பெஞ்சில் உள்ள மூத்த நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி தத்து ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, இந்த வழக்கை அவசர வழக்காக கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று கூறி வெள்ளிக்கிழமை ஜாமீன் மனு மீதான விசாரணையை நடத்துவதாக கூறி உத்தரவிட்டார். இதனால் ஜெயலலிதா தரப்பில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை எந்த நீதிபதியின் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்பது, வியாழக்கிழமை, கோர்ட்டில் வழக்கை பட்டியலிடும்போதுதான் தெரியவரும். வெள்ளிக்கிழமைக்கு பிறகு உச்சநீதிமன்றத்துக்கு தீபாவளி விடுமுறை விடப்படுகிறது. எனவே வெள்ளிக்கிழமை வாத, விவாதம் நீண்ட நேரம் நடைபெற்று அன்று முடிவெடுக்க முடியாமல் போனால், விசாரணை தீபாவளிக்கு பிறகு தொடரும் வாய்ப்புள்ளது.
இதனிடையே, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், தீர்ப்புக்கு இடைக்கால தடை வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த மனு கர்நாடக ஹைகோர்ட்டில் வரும் 27ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
ஜெயலலிதாவுக்காக ஆஜராகும் பாலி நரிமன், காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக கர்நாடகத்துக்கு ஆதரவாக வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications