ராஜீவ் கொலை வழக்கில் மத்திய அரசின் அடுத்த மூவ்... மறுசீராய்வு மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்
டெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளவன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய பாரதிய ஜனதா அரசு தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளவன் ஆகியோரின் கருணை மனு மீது மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் முடிவு எடுப்பதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டதை காரணம் காட்டி இவர்களின் தண்டனையை ஆயுளாக குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து இவர்கள் 3 பேர் உட்பட ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்து நிறைவேற்றினார்.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையே மறுபரிசீலனை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.
அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம், நீதிபதிகள் ரஞ்ஜன் கோகோய், எஸ்.கே.சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மத்திய அரசின் சீராய்வு மனுவை விசாரித்து கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியன்று தள்ளுபடி செய்தது.
அதன் பின்னர் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது 7 தமிழர் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அத்துடன் இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கும் மாற்றப்பட்டது.
இந்த அரசியல் சாசன பெஞ்ச் கடந்த 15-ந் தேதியன்று விசாரணையைத் தொடங்கியது. அப்போது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யும் முடிவு சரியே என தமிழக அரசு தமது தரப்பு வாதத்தை முன்வைத்தது.
இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக மத்திய பாரதிய ஜனதா அரசு மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் 3 தமிழரின் தூக்கு ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது தவறு. 20 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டார்கள் என்பதை காரணம் காட்டி தூக்கு தண்டனையை ரத்து செய்துவிட முடியாது; அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன், வரும் 28-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதேபோல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்யும் மாநில அரசின் அதிகார வரம்பு குறித்த வழக்கும் வரும் 28 ம் தேதியன்றே விசாரணைக்கு வருகிறது.