மீனவர்களுக்காக.. பாம்பனில் பாஜக நடத்திய 'பப்ளிசிட்டி' போராட்டம்!
பாம்பன்: கடல் தாமரை என்ற பெயரில் பாஜக சார்பில் பாம்பனில் மீனவர்களைக் காக்க்க கோரி ஒரு போராட்டம் நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் இதில் கலந்து கொண்டார். அவருக்கு மாநில பாஜக மீனவர் அணி சார்பில் ஆளுயர மாலை போட்டனர். வெள்ளி வாளையும் வழங்கினர்.
ஏற்கனவே மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரிடம் சிக்கி தினசரி அடி வாங்கியும், கைதாகியும், இலங்கை சிறையில் அடைபட்டு, உதைபட்டு வாழ்வாதாரம் பறிபோய்க் கொண்டிருக்கும் அவல நிலையில் உள்ள நிலையில், சுஷ்மா சுவராஜுக்கு மாலை போட்டு, வெள்ளி வாள் கொடுத்து பாஜகவினர் செய்த இந்த போராட்டத்தை வெறும் பப்ளிசிட்டிக்காக நடந்த போராட்டம் என்று அங்குள்ள மக்கள் வேதனையுடன் விமர்சித்துள்ளனர்.
முன்னதாக நேற்று நடந்த இந்தப் போராட்டத்திற்கு பாஜக மீனவர் அணித் தலைவர் சதீஷ் குமார் தலைமை தாங்கினார்.
நாதபுரம் மாவட்டம் பாம்பனில் தமிழக மீனவர் உரிமை காக்கும் வகையில் தமிழக பாரதீய ஜனதா மீனவர் அணி சார்பில் கடல்தாமரை என்ற போராட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. போராட்டத்துக்கு மாநில மீனவர் பிரிவு தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.
போராட்டத்தின்போது சுஷ்மா சுவராஜ் பேசுகையில்,
பாரதநாடு நீண்ட கடற்கரையை கொண்டது. இந்த பகுதியில் அதிகமான மீனவ சமுதாய மக்கள் வாழ்கின்றனர். கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் அந்நிய நாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானாலும், தமிழக மீனவர்கள் இலங்கை அரசாலும் பாதிக்கப்படுகின்றனர். சிறைபிடிப்பது மட்டுமல்லாமல் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
நான் இலங்கைக்கு சென்றபோது அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேயிடம் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து கூறினேன். ஆனால் தொடர்ந்து தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது.
நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடமும் மீனவ பெண்கள் நிலையை எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. தற்போது கூட 38 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் ராஜ்யசபை உறுப்பினராக மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவரை நரேந்திர மோடி தேர்ந்தெடுத்து உள்ளார். பா.ஜ.க. மீனவர் பிரிவு பொதுச்செயலாளர் முரளிதரராவ் தலைமையில் கொள்கை ரீதியான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் மீனவர் பிரச்சினைக்காக தனி அமைச்சர், தனி இலாகா அமைப்போம். கடற்கரை அருகே ஒரு மீனவர் நகரத்தை உருவாக்கி கல்வி உள்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி மீனவர்கள் வாழ்க்கைத்தரம் உயர நடவடிக்கை எடுப்போம்.
இலங்கை பிரச்சனையை இந்திய பிரதமர்தான் தீர்க்க முடியும். தமிழகம் தீர்க்க முடியாது. இதற்கு பா.ஜ.க. ஆட்சி அமைத்ததும் முழு தீர்வு காணப்படும் என்றார்.
சுஷ்மாவின் பேச்சும் கூட நாடாளுமன்றத் தேர்தலையொட்டியே இருந்ததால் இந்த போராட்டம், மீனவர்களுக்கான போராட்டம் என்ற நிலையைத் தாண்டி மீனவர்களின் ஆதரவை தேர்தலுக்குத் திரட்டுவது என்று மாறிப் போய்க் காணப்பட்டது.