இலங்கையின் நண்பரான சுஷ்மா மீனவர்களுக்காக போராடுவது தேர்தல் நாடகமே...: காங்கிரஸ் குற்றச்சாட்டு
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை கண்டித்து மீனவர்களுக்கு ஆதரவாக கடல்தாமரை என்ற போராட்டத்தை ராமேசுவரத்தில் நடத்தியது பாரதீய ஜனதாக் கட்சி. இப்போராட்டத்திற்கு சுஷ்மா சுவராஜ் தலைமை ஏற்றிருந்தார்.
இந்நிலையில், பாஜகவின் இப்போராட்டம் பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மத்திய இணையமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் கூறியதாவது:-
இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை பற்றி சுஷ்மா சுவராஜுக்கு நன்றாகவே தெரியும். அவர் இலங்கை அரசுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொள்ளாதபோதும் ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று இலங்கை சென்று வந்தவர்.
அந்த அளவுக்கு இலங்கை அரசுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். இப்போது தமிழக மீனவர்களுக்கு உதவுவது போல் தேர்தலுக்காக அவர் ஆடும் நாடகம்தான் இந்த போராட்டம். மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு மீனவர்களும் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
துறைமுக பகுதிகள் தவிர இதர பகுதிகளில் மீன்பிடிக்க ஒப்பந்தம் பேசி இருக்கிறார்கள். அதுவரை இருநாட்டு அமைச்சர்களோ, அதிகாரிகளோ இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வில்லை. இந்த பிரச்சனைக்கு விரைவில் சுமூக உடன்பாடு ஏற்படும். ஆனால் அதை உடைக்க சிலர் முயலுகிறார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.