லலித் மோடி பற்றி எந்த விவாதத்திற்கும் தயார்- சுஷ்மா ஸ்வராஜ்.. பதவி விலகினால் தான் எல்லாம்- காங்கிரஸ்
டெல்லி : லலித் மோடி விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கியுள்ள நிலையில், இது குறித்து விவாதிக்கத் தயார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் முறைகேட்டில் தொடர்புடைய லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் அமளியால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று மாநிலங்களை முடங்கியது.

அடுத்து வரும் நாட்களிலும் இப்பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்திற்கும் தயார் என்று சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது..
"நான் இன்றே எந்த விவாதத்திற்கும் தயாராக இருந்தேன். இதனை நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெரிவிக்குமாறு அருண் ஜெட்லியிடம் கூறினேன். அருண் ஜெட்லியும் இதனை அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்." என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், "முதலில் சுஷ்மா சுவராஜை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அதன்பின்னர்தான் விவாதம், மசோதா தாக்கல் எல்லாம் நடைபெறும்" என கூறியுள்ளார்.
இதனால் மழைக்கால கூட்டத் தொடர் பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் காணப்படும் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications