ஐஎஸ் ஆதரவாளரான மேற்கு வங்கத்தை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது
டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளரான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள தனியாக்ஹாலியை சேர்ந்தவர் ஆசிக் அகமது என்கிற ராஜா(19). பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கும் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் ராஜாவை பிடித்து கொல்கத்தாவில் வைத்து 5 நாட்கள் விசாரணை நடத்தினர். இதற்கிடையே அவரது வீட்டில் சோதனை நடத்தி சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ராஜாவை அடுத்த கட்ட விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து வந்தனர். டெல்லியில் வைத்து ராஜா புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய புலனாய்வு அமைப்பினர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் 14 பேரை இதுவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.