பெங்களூருவில் காலை முதல் விடாமல் வன்முறை.. ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட பஸ், லாரிகள் எரிப்பு!
பெங்களூரு: பெங்களூருவில் காலை 11 மணியில் இருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட பேருந்து, லாரிகள் எரிக்கப்பட்டுள்ளன. தமிழக பதிவு எண் கொண்ட லாரி, பேருந்துகளை தேடித் தேடி வன்முறையாளர்கள் தீ வைத்தனர்.
ஒரே நேரத்தில் கேபிஎன் நிறுவனத்திற்குச் சொந்தமான தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட 38 சொகுசு பேருந்துகள் உள்பட 65 ஆம்னி பஸ்களை தீக்கிரையாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வண்டிகள் விரைந்து கொண்டிருப்பதால் பெங்களூரு நகரத்தில் சைரன் சத்தம் ஒலித்துக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படாதால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான போராட்டம் தலை தூக்கியது. தமிழர்கள் கடைகள், வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைத்து கொளுத்தப்பட்டன.
கர்நாடகாவில், காவிரி நீர் விவகாரம் தொடர்பான வன்முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல இடங்களில், தமிழகப் பதிவெண் கொண்ட பேருந்துகள், சரக்கு வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை தாக்கப்பட்டும், தீ வைத்து எரிக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
பெங்களூரில் வெடித்துள்ள கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர இவை போதாது என்பதால் கூடுதலாக, சிஆர்பிஎப், ஆர்பிஎப், மத்திய தொழிலக படை ஆகியவை பெங்களூருவில் நடக்கும் கலவரத்தைக் கட்டுப்படுத்த களம் இறக்கப்பட்டுள்ளன. மேலும், 20 ஆயிரம் ஊர்க்காவல் படையினர், 185 கர்நாடக அதிரடிப் படையினரும் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் தெரிவித்துள்ளார். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூர் - மைசூர் நைஸ் சாலையில் டிசோசா லேஅவுட் பகுதியில் பிஎஸ்ஐடி கல்லூரி அருகே லாரி நிறுத்தமிடத்தில் 27 லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 27 லாரிகளும் சரக்குகளுடன் எரிந்து நாசமாகின. லாரிகள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்ததால் ஒன்றுக்கு வைக்கப்பட்ட தீ அனைத்து லாரிகளும் பரவியது.
அதேபோல அந்த இடத்தில் உள்ள கொடவனில் நிறுத்தப்பட்டிருந்த கே.பி.என் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான சொந்தமான 65 சொகுசு பேருந்துக்கள் பேருந்துகள் எரிக்கப்பட்டன. இன்று போராட்டம் நடைபெற்றதால் பேருந்துகள் அனைத்தும் பத்திரமாக கேபிஎன் பணிமனைக்குள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் அங்கு புகுந்த போராட்டக்காரர்கள் 2 பேருந்துகளுக்குத் தீவைத்துள்ளனர். ஆனால் அது அப்படியே மளமளவென மற்ற பேருந்துகளுக்கும் பரவி அந்த இடமே நெருப்புக் காடாக மாறியது. பேருந்துகள் ஒன்றுக்கொன்று அருகருகே நிறுத்தப்பட்டிருந்ததால் தீ மளமளவென பரவியது.
பேருந்துகள் எரிக்கப்பட்டதை கே.பி.என் நிறுவன உரிமையாளர் உறுதி செய்துள்ளார். தீயை அணைக்க தீயணைப்பு வண்டிகள் விரைந்து கொண்டிருப்பதால் சைரன் சத்தம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தீ கொளுந்து விட்டு எரிவதால் பெங்களூரு - மைசூரு சாலையே புகைமண்டலமாக மாறியுள்ளது.
ஒரே நேரத்தில் தமிழக பதிவெண் கொண்ட 65 பேருந்துகளும், 27 சரக்கு லாரிகளும் எரிக்கப்பட்டுள்ளதால் பெங்களூருவில் பதற்றம் அதிகரித்துள்ளது. பெங்களூருவில் சட்டம் ஒழுங்கு போலீசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் பதற்றமும், பரபரப்பும் அதிகரித்துள்ளது.
காலையில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நேரத்தில் இருந்து இதுவரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் கொண்ட லாரிகளும், பேருந்துகளும் எரிக்கப்பட்டுள்ளதாக பெங்களூருவில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications