அருண்ஜெட்லியுடன் ஜெ. சந்திப்பு - தமிழகத்திற்கு தேவையான நிதி வழங்க கோரிக்கை
டெல்லி: டெல்லியில் நேற்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்துப் பேசினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இலங்கை அதிபர் கலந்து கொண்டதால் பிரதமரின் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்தார் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து நேற்று டெல்லி சென்ற ஜெயலலிதா பிரதமர் மோடியைச் சந்தித்தார்.
ஜெயலலிதாவின் இந்த டெல்லி பயணத்தின் போது ஜனாதிபதி மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடனான சந்திப்பும் நடந்தது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று மாலை 4.30 மணிக்கு மத்திய நிதி, கம்பெனிகள் விவகாரம் மற்றும் ராணுவத்துறை மந்திரியை நார்த் பிளாக்கில் உள்ள அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது முதலமைச்சர், நிதியமைச்சரிடம், தமிழகம் தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக குறிப்புகள் அடங்கிய கடிதத்தை கொடுத்தார்.
அந்த கடிதத்தில் சரக்கு மற்றும் சேவைவரி நிலுவையில் இருக்கும் மத்திய விற்பனை வரிகுறைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு தொகையை வழங்குதல், மத்திய மானியங்களை வழங்குதல் தொடர்பான குறைபாடுகள், சமூக பாதுகாப்பு பென்ஷன்களுக்காக மத்திய உதவியை உயர்த்தி தருதல், வருமானவரி சட்டம் 40-வது பிரிவில் 2013-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை திரும்ப பெறுதல், மத்திய அரசு துணையோடு செயல்படுத்தப்படும் திட்டங்கள், நேரடி பலன் மாற்றம் போன்ற பல அம்சங்கள் இடம் பெற்று இருந்தன.
முதலமைச்சர் இந்த விவகாரங்களை விளக்கி நிதி அமைச்சகம் இதற்கு முன்னுரிமை கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். மத்திய நிதியமைச்சர் உடனடியாக சாதகமான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என முதலமைச்சரிடம் உறுதியளித்தார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.