தமிழிசை போட்டியிடும் தொகுதி விரைவில் அறிவிக்கப்படும்: ஜே.பி.நட்டா
டெல்லி: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் தொகுதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சரும், தேர்தல் குழு செயலாளருமான ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைக்கு வருகிற மே 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என மும்முரமான பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜகவும் கூட்டணி விஷயத்தில் தீவிரம் காட்டி வந்தது.

தேமுதிக பாஜக கூட்டணியில் இணையும் என பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து வருகிற சட்டபேரவைத் தேர்தலை சந்திக்கும் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.
இதையடுத்து பாஜக சார்பில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர்களின் பட்டியலுடன் அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லி சென்றனர்.
டெல்லியில் நேற்று பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் 54 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் ஜே.பி.நட்டா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்காக ஏழு, எட்டு பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவற்றை பரிசீலித்து, தமிழிசை போட்டியிடும் தொகுதியை விரைவில் அறிவிப்போம்' என்றார்
தமிழகத்தில் பாரதிய ஜனதாவுடன் இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுவதாகவும் அந்த கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications