தமிழகத் தேர்தலுக்கு ரெடியாகுங்க.. பாஜகவினருக்கு அமீத் ஷா "ஆர்டர்"
டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால் அதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்குமாறு தமிழக பாஜக தலைவர்களுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், அதனைத்தொடர்ந்து நடைபெற்று வரும் நிவாரணப்பணிகள், 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்து அமித்ஷாவுடன் தமிழக பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன், தேசியச் செயலர் எச்.ராஜா,மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மோகன் ராஜுலு, கேசவ ராஜன், தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் ,பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரண உதவிகள் வழங்கும் நடைமுறைகள் குறித்தும் அமித்ஷா நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். சட்டசபைத் தேர்தலையொட்டி தமிழகத்துக்கு எந்த தலைவர்கள், எப்போது வந்தால் பொருத்தமாக இருக்கும் என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தமிழக கட்சிகளுடனான உறவு குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து வரைவு திட்டம் தயார் செய்து விரைவில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
பாஜக கொள்கையின் படி, ஒவ்வொரு தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறும். அதன்படி தமிழகத்தில், மாவட்ட, ஒன்றிய அளவிலான தலைவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்ததும் மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications