காவிரி.. கர்நாடகாவில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி வீடு முற்றுகை
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் பணியாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டை கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகாவில் பந்த் நடத்தின.

இந்நிலையில், கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் ராமச்சந்திரன். தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், காவிரி விவகாரம் தொடர்பான இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு ஈடுபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனைக் கேள்விப்பட்ட கன்னட அமைப்பினர், தமிழகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகக் ராமச்சந்திரன் மீது குற்றஞ்சாட்டி அவரின் வீட்டை முற்றுகையிட்டனர். இதையடுத்துப் போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்திய ராமச்சந்திரன், தனது அறிவிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக கூறினார். அதை வெளியிட்டதற்காக மன்னிப்பும் கோரினார். அதன்பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் கர்நாடகத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1991 போன்ற கலவரத்தை சந்திக்க நேரிடும் என்று தமிழர்களின் வீடுகள், நிறுவனங்களில் புகுந்து தாக்குதல் நடத்துவோம் என்று கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பு எச்சரித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications