தமிழக உள்ளாட்சி தேர்தல்.. உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் இடைக்கால மனு
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழக மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படியே செயல்படலாமா என்று விளக்கம் கேட்கும் விதமாக தமிழக மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து 11 மாதம் ஆகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் தி.மு.க இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போட்ட வழக்கையடுத்து நீதிமன்றம் தடை விதித்தது.
இதனையடுத்த நீதிபதிகள் மே மாதம் 14ம் தேதிக்குள் தேர்தல் நடத்த உத்தரவிட்டும், தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
இதனிடையே உள்ளாட்சி அமைப்புகளுக்காக நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் நியமனம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டு சட்டசபை கூட்டத்தொடரின் போது தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு விட்டது.

நவம்பர் 17க்குள் தேர்தல்
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த 4ம் தேதி தீர்ப்பளித்த தலைமை நீதிபதி உள்ளாட்சித் தேர்தலை வருகின்ற நவம்பர் மாதம் 17-க்குள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

திமுக கேவியட் மனு
இதனிடையே திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று கேவியட் மனுத்தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏதேனும் மனுத்தாக்கல்செய்யப்பட்டால், தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்ட பின்னரே தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்தார்.

இடைக்கால மனு
திமுக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருக்கும் நிலையில் புதிதாக கேவியட் மனு ஒன்றையும் தாக்கல் செய்தது. இந்நிலையில் தமிழக மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது.

விளக்கம் கேட்டு மனு
இது ஒரு இடைக்கால மனுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பின்பற்றுவதாக வேண்டாமா என்று உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கும் விதமாகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால் ஹைகோர்ட் உத்தரவுபடி தேர்தல் நடத்தத் தயார் என்றும், அப்படி இல்லாத பட்சத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications