11 வயது மகளைக் காதலித்த 12 வயது மாணவன்.. அடித்தே கொன்ற ஆசிரியை!
ராஞ்சி: ராஞ்சியில் தனது 11 வயது மகளை காதலித்ததற்காக 12 வயது மாணவனை ஆசிரியை அடித்துக் கொலை செய்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ளது சபையர் சர்வதேச பள்ளி. அந்த பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தவர் வினய் மஹதோ(12). அவர் அதே பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியை நசிமா காத்தூனின் 11 வயது மகளை காதலித்துள்ளார்.

வினய் தனது மகளை காதலிப்பது நசிமாவுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 1 மணிக்கு மேல் வினய் விடுதி அறையில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஆசிரியர்கள் குடியிருப்புக்கு சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் மறுநாள் காலை வினய் நசிமாவின் வீட்டிற்கு முன்பு பிணமாக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வினயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் பள்ளி வளாகத்தில் வசிக்கும் ஊழியர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நசிமா காத்தூன் தனது 16 வயது மகன் ஷரிபின் உதவியுடன் வினயை அடித்துக் கொன்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் நசிமா, அவரது மகன், கணவர் ஆரிப், மகள் ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications